Saturday, June 18, 2011

பேராதனைப் பல்கலைக் கழகம்


இலங்கையின் கடைசி இராஜதானியின் தலைநகராக விளங்கிய கண்டி நகருக்கு அண்மையில் பேராதனைப் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இலங்கையின் முதல் பல்கலைக் கழகத்தின் இன்றைய வாரிசாக விளங்குவதும் இதுவே. பல்கலைக்கழகத்திற்கான நிதியுதவி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) இடமிருந்து பெறப்படுகின்றது.
                                                                                                                               
இலங்கையின் தலைநகரான கொழும்பில் இருந்து 110 கிலோமீட்டர்தூரத்திலும், கண்டி நகருக்குச் சுமார் 8 கிமீ. தொலைவிலும் உள்ள பேராதனை என்னும் இடத்தில் ஹந்தானை மலைச்  சாரலில் இப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பேராதனை இயற்கை அழகு வாய்ந்த ஒரு பகுதியாகும். இலங்கையின்சுற்றுலா முக்கியத்துவம் உடையதாக விளங்கும் பேராதனை தாவரவியற் பூங்காவும் இங்குதான் அமைந்துள்ளது. இப் பல்கலை கழகத்துக்கான  பிரதான நுழைவாயில் கலாஹா வீதி ஆகும். மகாவலி ஆற்றின் ஒரு பக்கம் பொறியியற் பீடமும் மறு பக்கம் ஏனைய பீடங்களும் அமைந்துள்ளன. அனைத்து பீடங்களையும்   இணைக்கும் நோக்கில் ஒற்றைத் தூணின் உதவியுடன் பாலமொன்று பேராசிரியர் துரைராஜா அவர்களால் நிர்மாணிக்கப்பட்டது.  இதுவே தற்காலத்தில் "அக்பர் பாலம்" என்று அழைக்கப்படுகிறது.

இலங்கையின் முதலாவது பல்கலைக் கழகம், இலங்கைப் பல்கலைக்கழகம்(University of Ceylon) என்ற பெயரில் 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1952 ஆகஸ்ட் 6 ஆம் நாள் பேராதனைக்கு இடம் மாறியது. அன்றிலிருந்து 1972 இல் இலங்கையிலிருந்த அனைத்துப் பல்கலைக் கழகங்களையும் இலங்கைப் பல்கலைக் கழகம் (University of Sri Lanka) என்ற ஒரே அமைப்பின் கீழ்க் கொண்டுவரும்வரை, இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை (University of Ceylon, Peradeniya) என அழைக்கப்பட்டது. 1972 இல், இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை வளாகம் (University of Sri Lanka - Peradeniya Campus) எனப் பெயர் மாற்றப்பட்டது. 1978 ஆம் ஆண்டு பல பகுதிகளிலும் அமைந்திருந்த இலங்கைப் பல்கலைக் கழகத்தின் வளாகங்கள் தனித்தனியான பல்கலைக் கழகங்கள் ஆனபோது, இது பேராதனைப் பல்கலைக் கழகம் ஆகியது.        

                                                                      
"Knowledge is the eye unto all” என்பது மகுட வாசகமாகும். இங்கே விவசாய பீடம், கலைப் பீடம், பல்மருத்துவப் பீடம், பொறியியல் பீடம், மருத்துவப் பீடம், விஞ்ஞான பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம் என்பவற்றுடன் கால்நடை முருத்துவமும், கால்நடை அறிவியலும் இணைந்த ஒரு பீடமும் உள்ளன. ஏறத்தாழ 6600 மாணவர்கள்  பட்டப் படிப்பை முடித்துக்கொண்டு வருடாந்தம் வெளியேறுகின்றனர்.



1 comment:

  1. மனதை விட்டகலாத பேராதனை! நன்றிகள்.

    ReplyDelete